மலுமிச்சம்பட்டி அருகே அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில், மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்ற வட மாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு.
கோவை: பீகார் மாநிலம் பூர்னியா பகுதியை சேர்ந்தவர் ரோவன். இவரது மகன் அவ்தேஸ்குமார் (24) மற்றும் அவரது நண்பர் நிதிஷ்குமார் (24) ஆகிய இருவரும் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் செருப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
அந்நிறுவனத்திற்கு சொந்தமான அறையில் தங்கியிருந்த இருவரும் நேற்றிரவு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சக நண்பர்களுடன் மலுமிச்சம்பட்டிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் அறைக்கு நடந்து சென்றனர்.
அப்போது மலுமிச்சம்பட்டி - ஒத்தக்கால்மண்டபம் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற அவ்தேஸ்குமார், நிதிஷ்குமார் ஆகியோர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் உடன் இருந்த நண்பர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 200 மீட்டர் தொலைவில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
உணவு சமைக்க மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சென்றபோது கார் மோதிய விபத்தில் வடமாநில நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.