பல்லடம் அருகே சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் அதிகாரிகள் திருப்பூர் மாவட்டத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்லடம் அடுத்த மாணிக்கபுரம் சாலையில் உள்ள கிளினிக்கில் சோதனை செய்தனர்.
அப்போது இந்த கிளினிக்கை நடத்தி வந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அபிமன்யு பிஸ்வாஷ் மகன் கிருஷ்ணா ஆனந்த் பிஷ்வாஷ் பிளஸ் டூ படித்துவிட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்ததை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து போலி மருத்துவர் கிருஷ்ணா ஆனந்த் பிஸ்வாசை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் பல்லடம் அடுத்த லட்சுமி மில் பகுதியிலும் பெண் ஒருவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
லட்சுமி மில் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மனைவி கோகிலா என்பவர் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இத்துடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கே ஊசிகள் கிடந்ததை ஆதாரமாக கொண்டு நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார் என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிஎஸ்சி நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் அளித்த புகார் அடிப்படையில், பல்லடம் போலீசார் கோகிலாவை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடத்தில் அடுத்தடுத்து இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.