கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் என்ற இளைஞர், இணையத்தில் வீடியோவை பார்த்து லைக் செய்தால் என்ற விளம்பரத்தை நம்பி 7.5 லட்சத்தை இழந்த நிலையில், மக்கள் கவனமாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்.
கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் பகுதி நேர வேலை செய்ய வேண்டும் என விருப்பப்பட்டு ஆன்லைனில் தேடியுள்ளார். அப்பொழுது பேஸ்புக்கில் தரப்பட்ட லிங்கை கிளிக் செய்திருக்கிறார்.
அந்த லிங்க் நேரடியாக வாட்ஸ் ஆப்புக்கு சென்றது. அதில் டெலிகிராமில் தொடர்பு கொள்ள ஒரு எண் தரப்பட்டுள்ளது. அதன்படி அந்த எண்ணுக்கு அன்பழகன் அழைத்திருக்கிறார். அப்போது பேசிய எதிர் தரப்பு நபர் தன்னுடைய பெயர் லூதர் சிங் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பகுதி நேர வேலையை எதிர் நோக்கிய வாலிபர் அன்பழகன் முன் ஆன்லைனில் ஒரு டாஸ்க் தரப்பட்டுள்ளது. விவரங்களை பதிவு செய்து தரப்பட்டுள்ள டாஸ்கை கம்ப்ளீட் செய்தால் அது நேரடியாக யூடியூப் செல்லும். அப்போது பார்க்கப்படும் வீடியோவை லைக் செய்து ஷேர் செய்ய வேண்டும்.
இதில் ஒரு யூடியூப் வீடியோ பார்ப்பதற்கு 50 ரூபாய் தரப்படும். இவ்வாறு மொத்தம் 7 டாஸ்க்-களை செய்து 350 ரூபாய் பெற்று இருக்கிறார். அக்கவுண்டுக்கு வித்ட்ரா செய்து பணத்தை பெற்றிருக்கிறார்.
அப்பொழுது கூடுதலாக ஒரு டாஸ்க் தரப்பட்டுள்ளது. அந்த டாஸ்கை மேற்கொள்ள முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாமென கூறியதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே டாஸ்க் செய்ததனால் ஆன்லைனில் பணம் பெற்றதால், அவர்களை நம்பிய அன்பழகன் பணம் செலுத்தி டாஸ்கை கம்ப்ளீட் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இவர் கடந்த நவம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை தொடர்ந்து டாஸ்க் செய்து பணம் பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் மூன்று தவணையாக 7 லட்சத்து 58 ஆயிரத்து 500 ரூபாய் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் முதலீடு செய்த பணத்தை டாஸ்க் முடித்துவிட்டு பார்த்த போது தான் அன்பழகனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அதாவது டாஸ்க் முடித்தாலும் பணம் பெறாதவாறு வித்ட்ரா செய்யும் ஆப்ஷனை பிளாக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்பழகனால் எதிர் தரப்பினரையும் தொடர்புகொள்ள முடியாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அன்பழகன் தான் ஸ்கேமர்களால் ஏமாற்றப்பட்டதை அறிந்து, உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர மேற்கொண்டு வந்துள்ளனர். ஆசை காட்டி மோசம் செய்த ஆன்லைன் ஆசாமிகள் அன்பழகன் மட்டுமின்றி பலரை வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் நூதன முறையில் கொள்ளையடிக்கின்றனர்.
பொதுமக்கள் ஆன்லைனில் தரப்படும் கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம் என கோவை மாநகர காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.