உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கோவை பந்தய சாலையில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.
கோவை: உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1988ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வரும் உலக எய்ட்ஸ் தினமானது, எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதமாகவும், ஆண்டுதோறும் டிசம்பர் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளான ஜேம்ஸ் டபிள்யூ.பன் மற்றும் தாமஸ் நெட்டர் என்பவர்களால் உலக எய்ட்ஸ் தினமானது தொடங்கப்பட்டது.
தொடக்கத்தில், இந்த தினமானது எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக அனைவராலும் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த நாளானது எச்.ஐ.வி பரிசோதனை, நோய் தடுப்பு குறித்து உலக அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக மாறியது.
ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் குறித்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த எய்ட்ஸ் தினத்தில் தேசிய, உள்ளூர் அரசாங்கங்கள் முதல் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கிடையே எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
இந்நிலையில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் அரசு மற்றும் பல்வேறு தனியார் கல்லூரி மாணவ மாணவிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியானது மேளதாளங்களுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.