கோவை சிட்கோ பகுதியை சேர்ந்த ரவிசங்கர் என்ற ஐடி ஊழியர், டெலகிராம் செயலியில் வந்த லிங்கை கிளிக் செய்து, பார்ட் டைம் ஜாப் செய்வதற்காக ஆறே நாளில் ரூ.32 லட்சம் பணத்தை இழந்ததாக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.
கோவை: சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. சைபர் குற்றங்களை தடுக்க பல்வேறு முயற்சிகளும் நடவடிக்கைகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதுவும் இது போன்ற சைபர் கிரைம் ஆசாமிகளுக்கு படித்த பட்டம் பெற்ற பட்டதாரிகளே பலிகடா ஆவது வாடிக்கையாக மாறியிருக்கின்றன.
குறிப்பாக ஆன்லைன் இன்வஸ்மெண்ட், ஆன்லைன் ஜாப் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பறிகொடுக்கின்றனர். அந்த வகையில் டெலகிராமில் வந்த லிங்கை கிளிக் செய்த நபர் ஒருவர் பார்ட் டைம் ஜாப் செய்ய முற்பட்டு ஆறே நாளில் 32 லட்ச ரூபாயை பறிகொடுத்திருக்கிறார்.
கோவை சிட்கோ பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர்,பார்ட் டைம் ஜாப் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது டெலகிராம் செயலிக்கு வந்த ஒரு லிங்க் அவரது கண்களில் பட்டிருக்கின்றன. உடனடியாக அந்த லிங்குக்குள் சென்று பார்த்தபோது சுற்றுலா தளங்களுக்கு ரேட்டிங் தரும் பணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பெயரில் அந்த தளம் (Website) இருந்திருக்கிறது. அப்போது அந்த நிறுவனத்தை ரவிசங்கர் டெலகிராமில் சாட்டிங் (Chatting) செய்து அணுகியிருக்கிறார். எதிர் தரப்பிலிருந்து தாங்கள் பெங்களூரில் இருந்து பேசுவதாகவும், இது கிளை அலுவலகம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த பணிக்கு முன்பணம் கட்டி ரேட்டிங் பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.அதாவது சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அந்த பகுதியை பற்றி ஸ்டார் ரேட்டிங் தருவதை போல வீட்டிலிருந்து ரேட்டிங் தந்து பணம் சம்பாதிக்கலாம் என்பதே இதன் சாரம்.
இதனை நம்பிய அந்த ஐ.டி வாலிபர் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு தொடர்ந்து முன் பணம் கட்டி டூரிஸ்டு சைட்டின் பேஜ்களை (Badge) பெற்று பணியில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது ஒரு சைட்டுக்கு 10,000 பணம் கட்டுவதாக வைத்துக்கொண்டால் பணியை முடித்தவுடன் 11 ஆயிரம் தருவார்கள். இதில் 1000 ரூபாய் லாபம்.
இப்படி ஆறு நாட்களில் மட்டும் ஏராளமான சைட்டுகளில் சுற்றுலா தளங்களுக்கு ரேட்டிங் தர 32 லட்சத்து 23 ஆயிரத்து 909 ரூபாய் பணத்தை ஆன்லைனில் செலுத்தியிருக்கிறார். ஆனால் ஒரு பைசா கூட திரும்ப வரவில்லை. டெலகிராமில் நடந்த சேட்டும் (chat) கிளியர் செய்யப்பட்டது.
இதனால் தான் ஆன்லைன் ஆசாமிகளால் ஏமாற்றப்பட்டதாக நினைத்து சிட்டி சைபர் கிரைம் போலிசில் ஐ.டி இளைஞர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதல்கட்டமாக ஆன்லைன் ஸ்கேமர்களின் வங்கி கணக்குகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
பார்ட் டைம் ஜாப்-க்காக ஐடி இளைஞர் ஒருவர், ஆறே நாளில் 32 லட்சம் ரூபாயை பறிகொடுத்த பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.