கோவை வடவள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 சவரன் நகைகளை கொள்ளையடித்து மர்ம நபர்கள் கைவரிசை.
கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த குருசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சீனிவாசன் கடந்த 24 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல அவரது வீட்டில் பணியாற்றும் மணியம்மாள் என்ற பெண் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பிரோ உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மணியம்மாள் உடனடியாக சீனிவாசனுக்கு தகவல் அளித்துள்ளார்.
இதன் காரணமாக உடனடியாக கோவைக்கு வந்த சீனிவாசன் வீட்டில் பார்த்த போது பிரோவில் இருந்த சுமார் 12 சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தடயவியல் துறை அதிகாரிகள் உதவியுடன் தடயங்களை சேகரித்தது மட்டுமல்லாமல், அங்கிருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.