கூடலூர் அருகே மூதாட்டியை கொன்றதுடன், ஏராளமான வீடுகளை இடித்து அட்டகாசம் செய்த PM2 மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் தயாரான நிலையில், யானையானது கேரளா மாநில எல்லைக்கு சென்றதால் மீண்டும் வந்தவுடன் பிடித்து இடமாற்றம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி: கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தியதோடு, கடந்த 19ஆம் தேதி பாப்பாத்தி என்ற மூதாட்டி உயிர் இழப்பிற்கு காரணமான PM-2 மக்னா யானையை பிடித்து இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அட்டகாசம் செய்த யானையை பிடிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் கால்நடை மருத்துவ குழுவினரின் உதவியோடு யானையை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மக்னா யானையின் குணாதிசயங்கள், அது சென்று வரும் வழிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து அதற்கு ஏற்ப யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை பணியாளர்கள் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் வியூகம் வகுத்துள்ளனர்.
இது தொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளதாவது, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மக்னா யானையை கண்காணித்து வரும் வனத்துறை பணியாளர்களோடு ஆலோசனை நடத்தப்படுள்ளதாகவும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
சரியான சூழல் அமையும் போது யானை பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்படும் என கூறிய அவர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளை பிடிப்பதில் அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.