பணிக்கம்பட்டி ஊராட்சி பகுதியில் கழிவுகளால் மண்டி கிடக்கும் எலந்த குட்டையை சுத்தம் செய்து தூர்வாருமாறு பலமுறை மனு அளித்தும் சரியாக நடவடிக்கை எடுக்கபடாததால் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிகை எடுப்பதாக உறுதியளித்ததால் தர்ணா கைவிடப்பட்டது.
திருப்பூர்: பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி கிராமத்தில் சுத்தம் செய்யாமல் கழிவுகள் நிரம்பி இருக்கும் எலந்த குட்டையை மீட்டுதரக்கோரி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எலந்த குட்டை உள்ளது. இக்குட்டையானது 300க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. ஆனால் சமீபகாலமாக எலந்த குட்டை முழுவதும் புதர்கள் மண்டி ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. மேலும் ஊராட்சியின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கோழி இறைச்சி கழிவுகள் குப்பைகள் உள்ளிட்டவை இங்குதான் கொட்டப்படுகின்றன.
இதனால் புதர் மண்டி ஆக்கிரமிப்புகளாலும் கழிவு குப்பைகள் கொட்டப்பட்டதாலும் குட்டை மாசடைந்து, நீர் ஆதாரத்தை இழந்துள்ளது. குட்டையை தூர் வார வேண்டும் என்றும், கழிவுகள், குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியாவிடம் மனு அளிக்கப்பட்டது.
இதை அடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குட்டை தூர்வாரும் பணி துவங்கியது. பணிகள் அரைகுறையாக நடந்த நிலையில், கூடிய நிதி ஆதாரமில்லாததால் பணிகளை மேற்கொள்ள இயலாது என ஊராட்சி நிர்வாகம் பணிகளை கைவிட்டதாக கூறப்படுகிறது.
இதையெடுத்து அப்பகுதி விவசாயிகள் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:
குட்டையை தூர்வாரி கழிவுகள் குப்பைகளை அகற்ற வேண்டும் என கடந்த ஒரு மாதமாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஊராட்சி நிர்வாகம் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வந்தது. திடீரென இன்று நிதி ஆதாரமில்லாததால் பணிகளை மேற்கொள்ள இயலாது என ஊராட்சி நிர்வாகம் கூறிவிட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்ரியாவிடம் கேட்டால், ஊராட்சியில் நிதி இல்லை என்றும் வண்டிக்கு டீசல் அடிக்கவும் பணம் கிடையாது எனவும் கூறுகிறார். எனவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். குட்டையை முழுமையாக தூர்வாராவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியா மற்றும் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குட்டையை தூர்வார உத்தரவிட்டு கடிதம் அளிப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதால் விவசாயிகள் தர்ணாவை கைவிட்டனர்.