கோவை இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தில் கார் ஓட்ட ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி 2.5 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கவுண்டம்பாளையம் கண்ணம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டி வருகிறார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு அவரது டாக்ஸில் வாடிக்கையாளராக சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் வந்துள்ளார்.
தான் இந்தியன் ஆயில் கார்பரேசனில் மேலாளராக பணியாற்றுவதாகவும், தனது நிறுவனத்தில் வாடகை கார் ஓட்ட ஒப்பந்தம் வாங்கி தருவதாகவும் கதிரவனிடம் கூறி உள்ளார். மேலும் இந்த ஒப்பந்தத்தை பெற 2.5 லட்சம் ரூபாய் தருமாறு அவர் கதிரவனிடம் கூறியுள்ளார்.
அவரது பேச்சை நம்பிய கதிரவன் கடந்த 2 ஆம் தேதி 1 லட்சம் ரூபாய் முன்பனமாக கொடுத்துள்ளார். பணம் வாங்கியதற்கான பத்திரத்தில் சேவியர் எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் மீண்டும் 1.5 லட்சம் ரூபாயை கதிரவனிடம் சேவியர் வாங்கியுள்ளார். அதற்கான பத்திரம் தருவதாக கூறிய சேவியர், தனது செல்போனை சுவிச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது தான் ஏமாற்றப்பட்டது கதிரவனுக்கு தெரியவந்தது.
இந்நிலையில் இன்று காலை கதிரவன் லட்சுமி மில்ஸ் வழியாக சென்று கொண்டிருந்த போது சுங்கம் அருகே சேவியர் நிற்பதை கண்டுள்ளார். உடனடியாக அவரிடம் சென்ற போது சேவியர் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இருப்பினும் அவரை மடக்கி பிடித்த கதிரவன் பந்தைய சாலை போலீசில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து சேவியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.