நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ரிசர்வ் வங்கி சார்பில், கலை நிகழ்ச்சிகள் மூலம் வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
நீலகிரி: நாடு முழுவதும் வங்கி மோசடி, செல்போனில் தொடர்பு கொண்டு மோசடி, பாமர மக்களிடம் ஏடிஎம் கார்டு எண்ணை பெற்று மோசடி செய்வது உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க ரிசர்வ் வங்கி “தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் 2022” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகள் வாயிலாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
இன்று முதல் ஒரு மாதம் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு வங்கி மோசடி குறித்த தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட உள்ளன.
உதகை ஏடிசி, அரசு தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடையே வாடிக்கையாளர்களின் பொறுப்பு, அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கி பரிவர்த்தனை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாளைய தினம் (22.11.2022) குன்னூர் மற்றும் கோத்தகிரி பேருந்து நிலையங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் ப்ரௌசர், வெப்சைட், ஹேப்ஸ் குறித்தும், சோதித்தறியப்பட்ட நம்பகமான உலாவி, பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்புடன் கூடிய இணையதளங்களை பயன்படுத்துதல், பணம் செலுத்தும் செயலிகளை அவ்வப்போது புதுப்பித்து வைத்தல் மற்றும் தெரிந்த பயனாளிகளுக்கு மட்டுமே பணமாற்றம் செய்தல், பணம் செலுத்தும் போது பெறுபவரின் கோரிக்கை தகவல்களை சரிபார்த்தல்,
கடன் பற்று அட்டை பயன்படுத்தும் போது அட்டை மீது கவனம் செலுத்துதல், பரிவர்த்தனைக்கு பிறகு வரும் குறுஞ்செய்தியில் உள்ள பரிவர்த்தனை தொகை சரியாக உள்ளதா, ரசீதுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுதல் போன்ற செய்யக் கூடியவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளன.
இதேபோல் பணப்பரிவர்த்தனையின் போது செய்யக்கூடாதவைகளான பொது இடங்களில் சாதனங்களை உபயோகித்து பரிவர்த்தனை செய்தல், பாதுகாப்பற்ற திறந்த வலைதள வசதிகளை உபயோகித்து பரிவர்த்தனை செய்தல், பின், ஓடிபி, கடவு சொல் ஆகியவற்றினை பகிர்ந்து கொள்ளுதல், முக்கிய தகவல்களை கைப்பேசியில் வைத்திருத்தல்,
அட்டை மற்றும் அட்டை குறித்த தகவல்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை குறித்தும், வங்கியின் வாடிக்கையாளர்களின் உரிமை, தவறுதலாக பணம் செலுத்தப்பட்டு இருந்தால் அதனை மீட்பது போன்றவற்றை குறித்தும் எடுத்துரைக்கப்பட உள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கரூர் வைஸ்யா வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, கரூர் வைஸ்யா வங்கி கிளை மேலாளர் ரவிக்குமார் மற்றும் வங்கியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.