தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, கடந்த 2021-22 நிதியாண்டில் கோவையில் ரத்த தான முகாம்கள் நடத்திய 53 அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன், சான்றிதழ் மற்றும் கேடயன் வழங்கி பாராட்டு.
கோவை: கோவை மாவட்டத்தில், தளபதி ரத்த தான இயக்கம், நேவி ஐஎன்எஸ் அக்ரனி, 110 இன்ஃபட்டாலியன், எல் அன்ட் டி, ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், மற்றும் தன்னார்வலர்கள் அமைப்புகள் உள்ளிட்ட 53 ரத்த தான முகாம் அமைப்புகள் உள்ளன.
2021-22 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் செயல்பட்டு வரும் 4 அரசு ரத்த வங்கிகளின் மூலம் 14,724 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதில் 53 அமைப்புகள் மூலம் 114 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 5,901 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ரத்த தான முகாம்கள் நடத்திய அமைப்புகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், 2021-2022 ஆம் நிதி ஆண்டில், ரத்த தான முகாம்கள் நடத்திய 53 அமைப்புகளுக்கும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மற்றும் மாவட்ட குருதி பரிமாற்ற குழுமம் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு, 53 ரத்த தான முகாம்களை நடத்திய அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக்கப்பணிகள்) மரு.சந்திரா, எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர்/துணை இயக்குநர் சுககாதாரப்பணிகள் மரு.அருணா, மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் மரு.மங்கையர்கரசி, மாவட்ட திட்ட மேலாளர் கோபாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.