தக்காளிக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தக்காளியை ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்து நூதன ஆர்ப்பாட்டம்.
கோவை: தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருகை தந்தனர். அப்போது, ஒரு கிலோ தக்காளியை 5 ரூபாய்க்கு நூதன விற்பனையில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் சேகரிக்கப்படும் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது, கடந்த ஒரு மாதமாக தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் பனியின் காரணமாக தக்காளியில் வெடிப்பு அழுகல் ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ 6 ரூபாய்க்கு தக்காளியை வாங்குகிறார்கள். மக்களுக்கு 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனை அரசு முறைப்படுத்த வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தக்காளிக்கு உரிய விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.