கோவை வேடப்பட்டி அருகே கடந்த 2019ஆம் ஆண்டு ஆடுகளை விஷம் வைத்தவர்கள் மீது ஜெகநாதன் என்பவர் காவல்நிலையம், ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் கையில் அல்வாவுடன் வந்து நூதனமாக மனு அளித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது 12 ஆடுகளை இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த செந்தில்,பழனியப்பன்,பாண்டியன் ஆகியோர் விஷம் வைத்து கொன்று விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்துள்ளார். இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் அல்வாவுடன் வந்த ஜெகநாதன், நூதனமான முறையில் மனு அளித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, எனது புகார் தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்காமல் கடந்த மூன்று ஆண்டுகளாகஅலைக்கழிக்கின்றனர். எனது ஆடுகளை திருப்பி அளித்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று ஆண்டுகளாக எனது புகாரை விசாரிக்காமல் அல்வா கொடுத்தவர்களுக்கு தற்போது அல்வா கொடுக்கவே அல்வாவை எடுத்து வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.