கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த கிணத்துக்கடவை சேர்ந்த காதர் பாட்ஷா (27), கணேசபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (26), மணிகண்டன் (24), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அகிலேஷ் (22) என்ற 4 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், மதுக்கரை அடுத்த ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிடிபட்ட நபர்கள் கிணத்துக்கடவை சேர்ந்த காதர் பாட்ஷா (27), கணேசபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (26), மணிகண்டன் (24), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அகிலேஷ் (22) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்ய அங்கு வந்திருந்ததும் தெரியவந்தது. இதில், பிடிப்பட்ட சபீர் என்பவர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் கொலை வழக்கும், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சங்கிலி பறிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
அதேபோல், ரவிக்குமார் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு, மணிகண்டன் மீது செட்டிபாளையம் காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கு, அகிலேஷ் மீது காரமடை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சுமார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.