கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்தாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கப்பட உள்ளது என்றார்.
கோவை: கோவை கொடிசியா வளாகத்தில், 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு கூட்டுறவு சங்கம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கூட்டுறவு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது, இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மிக அதிகமாக கடன் அளிக்க இருக்கிறோம். மகளிர் சுய உதவிக்குழு திட்டம் கலைஞரால் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு அதிக அளவில் கடன் கொடுக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 5,000 கோடி நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் சுபிட்சமாக இருக்கின்றனர். கூட்டுறவு சங்கங்கள்தான் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக மாற்றுகிறது.
இந்த கூட்டுறவில் சமத்துவம் இருக்கிறது. கூட்டுறவு துறை தலை நிமிர்ந்து நிற்கின்றது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட இருக்கிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட இருக்கின்றது. அனைத்து கூட்டுறவு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கிறது. நிதி நெருக்கடி இருந்தாலும் முதல்வர் இல்லை என்று சொல்வதில்லை.
அனைத்து விவசாயிகளுக்கும் மின்சாரம் கொடுத்தது கலைஞர் தான். மின்சார துறை 1.5 லட்சம் கடனில் இருந்தது. 10 ஆண்டுகளாக இலவச மின்சாரம் கொடுக்கப்படவில்லை. ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
23 மத்திய கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்க கூடிய ஓரே மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் 4,451 கூட்டுறவு சங்கமும் லாபத்தில் இயங்க முயற்சி செய்ய வேண்டும். அமைச்சராக பொறுப்பேற்ற பின் புதிய உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற உறுப்பினராக சேர அனுமதிக்கப்பட்டது. வட்டியில்லாமல் மாடு வைத்திருப்பவர்களுக்கு தீவன கடன் வழங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த பின் கைம்பெண்களுக்கு வட்டி சதவீதம் குறைக்கப்பட்டது. தமிழகத்தில் கூட்டுறவு துறை முன்னணியில் இருக்கின்றது.
தமிழகத்தில் விவசாயிகள் தேசிய மயமாக்கபட்ட, வணிக ரீதியான வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும். இந்தாண்டு 7,300 கோடி கொடுத்துள்ளோம். வரும் மார்ச் மாத்த்திற்குள் 12,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 33,000 ரேசன் கடைகள் இயங்குகின்றன. இதில், 6,900 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. ஏற்கனவே கடன் வாங்கிய தொடக்க வேளாண்மை வங்கிகளில் கடன் வழங்க இன்று முதல் அனுமதிக்கப்படும்.
இது மக்களின் அரசு, பொது நலனுக்கான உருவாக்கப்பட்ட மேன்மையான அரசு, நிறைய பேர் கூட்டுறவு வேலை கிடைக்கும் இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர். 180 மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் இடம் மாறுதல் கேட்டு வந்திருக்கின்றது. தமிழகத்தில் 7 கோடி மக்களில் ஒருவர் கூட துன்பப்பட கூடாது என நினைக்கும் அரசு இது.
தமிழகத்தில் பணி மாறுதல் தேவைப்படுபவர்களுக்கு மாறுதல் வழங்கப்படும். அதிகாரிகள் இதை பரீசிலனை செய்து வழங்குவார்கள். கூட்டுறவு துறையில் என்னென்ன இடர்பாடுகள் இருக்கிறதோ அதை சரி செய்து கடன் தேவைப்படுபவர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு கோடி பேர் தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கின்றனர். கூட்டுறவு துறைக்கு 6,000 க்கும் மேல் ஆட்களை பணிக்கு சேர்க்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார். நீண்ட காலமாக ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பலன்கள் பெறாமல் இருந்தவர்களுக்கு சிறப்பு அமைப்பு ஏற்படுத்தி நிவர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.