டேன் டீ நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்காக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் சுமார் 14 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் டேன் டீ நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களை உடனடியாக குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும்.
நடுவட்டம்,வால்பாறை டேன் டீ நிர்வாகம் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கூடலூர் டேன் டீ நிர்வாகத்தில் பணியமர்த்தப்படுவர் என வனத்துறை சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பானது, டேன் டீ தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், டேன் டீ எஸ்டேட்டை வனப்பகுதியாக மாற்றும்திட்டத்தை கைவிட்டு ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு குடியிருப்புகளை கட்டி தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு நேற்று டேன் டீ யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்குஇலவசமாக வீடுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
குறிப்பிட்ட தொகையைக் கட்டி வீடுகள் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவித்த நிலையில், தமிழக அரசு எந்த தொகையும் செலுத்தாமல் தொழிலாளர்களுக்கான குடியிருப்பை தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் உதகை அருகேயுள்ள அல்லஞ்சி பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில், கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே மாதம் ஊட்டி வந்திருந்த போது டேன் டீ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் அவரை சந்தித்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், டேன் டீ தோட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பலர் தொடர்ந்து குடியிருப்புகளில் இருந்து வருவதால் புதிதாக பணிக்கு சேருபவர்களுக்கு வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர்.
இதனால், நகர் புற மேம்பாட்டு வாரியம் சார்பில் ஊட்டியில் அல்லஞ்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் தற்போது கட்டப்பட்டு வரும் ஒவ்வொரு வீடுகளும் ரூ.14 லட்சம் மதிப்பிலானவை.
இந்த வீடுகளுக்கு தொழிலாளர்கள் ரூ.3 லட்சம் கட்ட வேண்டும் என நகர் புற மேம்பாட்டு வாரியம் கூறியிருந்தது. ஆனால், அந்த தொகையை ஓய்வு பெற்ற தொழிலாளர்களால் செலுத்த முடியாது என டேன் டீ தொழிலாளகள் தமிழக முதல்வருக்கு தெரிவித்தனர். மேலும், நாங்களும் தொழிலாளர்களின் நிலையை முதல்வரிடம் தெரிவித்தோம்.
இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர், ஓய்வு பெற்ற டேன் டீ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்குவதற்காக அவர்கள் கட்ட வேண்டிய தொகையை அரசே ஏற்கும் என கூறி அதற்காக, ரூ.12.43 கோடி விடுவித்துள்ளார்.
இந்த தொகையை நகர் புற மேம்பாட்டு வாரியத்திற்கு அரசு செலுத்தி, ஓய்வு பெற்ற டேன் டீ தொழிலாளர்கள் 677 பேருக்கு வீடுகள் கிடைக்க செய்யும்.
இதில், கூடலூர் பகுதியில் உள்ள டேன் டீ நிறுவனத்தில் பணியாற்றி வரும் 524 பேரும், குன்னூர் பகுதியில் உள்ள டேன் டீ தோட்டங்களில் பணியாற்றி வரும் 23 தொழிலாளர்களும், கோத்தகிரி பகுதியில் பணியாற்றி வரும் 65 தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.