உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கடசோலை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்குள் கரடியொன்று புகுந்து பொருட்களை சூறையாடியது. தொடரும் இச்சம்பவத்தால் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனபகுதிக்குள் விடுமாறு வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: உதகை அருகே உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கடசோலை பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர் .
வனத்தை ஒட்டி அமைந்துள்ள கடசோலை, ஆல்காடு பகுதிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகஇப்பகுதியில் கரடி நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
இன்று காலை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கரடி பள்ளி வகுப்பறை கதவை உடைத்து, வகுப்புக்குள் நுழைந்துள்ளது. உணவு தேடி வந்த கரடி அங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு பீரோ, ஆசிரியர், மாணவர்கள் அமரும் இருக்கைகளை உடைத்து புத்தகங்களை கிழித்தும் வகுப்பறையை சூறையாடியது.
உணவு ஏதும் கிடைக்காததால் கரடி மீண்டும் அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்று மறைந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் அளித்த புகார் அடிப்படையில் பள்ளி வளாகத்தை சுற்றி கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து இந்தப் பள்ளியில் கரடி அட்டகாசம் செய்து வருவதால் கரடியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.