திருப்பூர் பல்லடம் எலந்தக்கோட்டை பகுதியில் ஓடை தூர்வாரப்படாததால் சாலை மறியலில் ஈடுபட முயற்ச்சித்த கிராம மக்களிடம் பல்லடம் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எலந்த குட்டை கிராமம் உள்ளது. இதன் அருகே கேரளாவிற்கு செல்லக்கூடிய சாலை ஓரத்தில் ஓடை ஒன்று உள்ளது. இந்த ஓடை தூர்வாரப்படாமல் முட்புதர்கள் மண்டி கிடைக்கின்றன.
இந்த ஓடையில் பல்லடம் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் பல்லடம் நகர பகுதிகளில் உள்ள கோழி கழிவுகள், மீன் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் என அனைத்தும் இரவோடு இரவாக ஓடையில் கொட்டப்படுவதால் பணிக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்று வட்டார பகுதிகளிலும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்த ஓடையை தூர்வாரி சுத்தம் செய்யப்பட வேண்டும் என பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் இன்று எலந்த குட்டை பகுதியை சேர்ந்த மக்கள் 50 க்கு மேற்பட்டவர்கள் பல்லடம் கொச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் பல்லடம் தாசில்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வார காலத்திற்குள் இந்த குட்டையானது முழுவதும் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்படும் என தெரிவித்தனர். அடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதே நிலை ஒரு வார காலத்திற்கு மேல் ஓடை தூர்வாரப்படாமல் நீடிக்குமானால் கேரளாவுக்கு செல்லக்கூடிய பல்லடம் கொச்சின் சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.