தென்மேற்கு பருவ மழையின் போது, நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் வகையில் 82 பணிகளுக்காக மொத்தம் 15 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நீலகிரி: தென்மேற்கு பருவ மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க தமிழக அரசு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த தென்மேற்கு பருவ மழையின் போது நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய பகுதிகளில் ஏராளமான இடங்களில் சுற்றுச்சுவர், தடுப்புச்சுவர், நடைபாதைகள், பாலங்கள் சேதமடைந்தன.
இதனைடுத்து மழை பாதிப்புகள் தொடர்பாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், மழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து துறை அலுவலர்கள் மூலம் கணக்கீடு செய்து தமிழக அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைத்தனர்.
அதன்படி, குன்னூர் நகராட்சியில் மழைநீர் வடிகால் கட்டும் பணி உள்ளிட்ட 30 பணிகளுக்கு ரூ.463.75 லட்சம் நிதி தேவைப்படுவதாகவும், கூடலூர் நகராட்சியில் சிறிய பாலம், தடுப்புச்சுவர், வடிகால் உள்ளிட்ட 35 பணிகளுக்கு ரூ.663.67 லட்சம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நெல்லியாளம் நகராட்சியில் வடிகால், நடைபாதை உள்ளிட்ட 17 பணிகளுக்காக ரூ.384.60 லட்சம் என மொத்தம் 82 பணிகள் ரூ.15 கோடி தேவைப்படுவதாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
தற்போது மூலதன மானிய நிதியில் சேமிப்பு நிதியின் மூலம் மேற்கொள்ள நகராட்சிகள் துறையிடமிருந்து நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளதால் பணிகள் விரைவில் தொடங்கப்படும்
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.