87, 88 வார்டுகளில் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. வேலுமணி சாலைகளை ஒருவாரத்தில் சீரமைக்கவில்லை என்றால் மாபெரும் உண்ணாவிரதம் நடத்தப்படும் என்றார்.
கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள 87 மற்றும் 88 வது வார்டுகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது தாழ்வான பகுதி என்பதால், செங்குளத்தில் நீர் நிறையும் போது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பகுதியில் சாக்கடைக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால், அதை ரத்து செய்து விட்டனர். நிறைய லாரிகளில் ரெட்மிக்ஸ் கொண்டு வந்து சாலைகளை சீரமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளருக்கு தகவல் அளித்தும் அவர்கள் யாரும் இங்கு வரவில்லை.
காலையில் இருந்து அதிகாரிகள் யாரும் வரவில்லை. தண்ணீரில் தவித்து வந்த மூதாட்டியை நாங்கள் மீட்டு, வேறு இடத்தில் தங்க வைத்துள்ளோம். இந்த பகுதியில் மக்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. அதிகாரிகள் தயவு செய்து வேலை செய்ய வேண்டும்.
குறிச்சிகுளம் பகுதியில் ஒன்றரை ஆண்டுகளாக எந்த பணிகளும் நடைபெறவில்லை. டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரிகள் அதிகம் விதிக்கப்பட்டு உள்ளதால் பணம் இல்லை என்று சொல்லாமல் அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னையில் நான் செய்த பணிகளுக்கு பின்பு இது வரை எந்த வேலையும் பார்க்க வில்லை கோவை மாவட்ட மக்களை இந்த அரசு புறக்கணிக்கிறது. ஆய்வு செய்த பின்னர், பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் மனுவாக அளிக்க போகிறேன். ஒரு வாரத்தில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
2011ஆம் ஆண்டுக்கு பின்பு திருச்சி, பாலக்காடு சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் அதிமுக ஆட்சியில் தான் போடப்பட்டது. கோவையில் நடைபெற்று வந்த பாலத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 500 சாலை பணிகள் நிறுத்தப்பட்டுளளது. இப்போது மாநகராட்சிக்கு வருமானம் அதிகமாக வருவதால், சாலை பணிகளை உடனடியாக துவங்க வேண்டும்.
சென்னையில் சாலைகள் நன்றாக இருப்பதாக சொல்கின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் அமைக்கப் பட்டது. நன்றாக கூட மழை பெய்ய வில்லை. இந்த அரசு விளம்ப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் வேலையை செய்ய வேண்டும். தொலைக்காட்சியில் நடிக்காமல் வேலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.