வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய 4 மாநில போலீசாருக்கு பல ஆண்டுகளாக சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வீரப்பன். இந்நிலையில், தமிழக அதிரடிப்படை போலீசார் சந்தனகடத்தல் வீரப்பனை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.
இதனிடையே, கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சத்தியமங்கலத்தில் வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட மூன்று பேர் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் வசித்து வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் மற்றும் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். 3 பேரும் கோவை மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில், கோவை சிறையில் இருந்த மாதையன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே வயது மூப்பு காரணமாக உடல்நிலையில் சரியில்லாமல் போன நிலையில், சிகிச்சை பலனின்றி மாதையன் உயிரிழந்தார்.
இதனிடையே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பன் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள், டீக்கான், அப்துல் ரசாக், இப்ராஹிம் ஆகியோர் 32 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டனர்.
கோவை மத்திய சிறையில் உள்ள 14 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளினை முன்னிட்டு சிறையில் இருந்து முன் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஐந்தாவது கட்டமாக வீரப்பன் கூட்டாளிகள் 2 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.