காரமடை அடுத்த மொட்டியூர் பழங்குடி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்த நிலையில், பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் உதவியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் காரமடை அடுத்த மொட்டியூர் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மருதன். இவரது மனைவி சித்ரா (23). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இரண்டாவதாக கருவுற்றிருந்த சித்ராவிற்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், சாலைகள் மோசமான நிலையில் இருந்ததாலும் 108 ஆம்புலன்ஸிக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில், விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சித்ராவை அழைத்துக் கொண்டு அரசு மருத்துமனையை நோக்கி புறப்பட்டுச் சென்றனர். அப்போது, சித்ரா உடல் நிலை மோசமடைய துவங்கியதாக தெரிகிறது.
இதன் காரணமாக சீலியூர் - தோலம்பதி சாலையில் நீலாம்பதி அருகே வந்த போது வலி அதிகமானதால் அவசர மருத்துவ உதவியாளர் பாலமுருகன், பைலட் அருண், அவசரகால மேலாளர் விக்னேஷ் ஆகியோர் சித்ராவிற்கு பிரசவம் பார்த்தனர்.
இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். இதையடுத்து இருவரையும் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
கொட்டும் மழையில் பழங்குடி இன பெண்ணுக்கு உடனடியாக பிரசவம் பார்த்து காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.