கெத்தை மலைப்பாதையில் காட்டு யானைகள் வழிமறிக்கும் சம்பவங்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வனத்துறை எச்சரிக்கை.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இருந்து மஞ்சூர், கெத்தை, காரமடை வழியாக கோவை செல்லும் மூன்றாவது மாற்றுபாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதிக்கு கடந்த சில நாட்களாக யானை கூட்டங்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு வந்துள்ள யானைக் கூட்டங்கள் கெத்தை மலைப்பாதையில் அடிக்கடி முகாமிடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளையும் அச்சறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தை யானை கூட்டம் வழிமறித்ததுடன் நீண்ட நேரமாக பேருந்து செல்ல வழி விடாமல் சாலையின் நடுவில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
யானைகளை கண்டு அச்சமடைந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை உடனடியாக அதே இடத்தில் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அரை மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் சாலையில் இருந்து விலகிச் சென்றதை தொடர்ந்து, அரசு பேருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றது.
அரசு பேருந்தை யானைகள் வழிமறித்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கெத்தை மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.