உதகையில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் மழை சேதங்களை ஆய்வு செய்த ஆட்சியர் அம்ரித், மழைநீரை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நீலகிரி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
உதகை நகரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோடப்பமந்து கால்வாயில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் அருகிலுள்ள சாலைகளுக்கும் குடியிருப்புகளுக்கும் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் உதகை பேருந்து நிலையத்திலிருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் மழை நீர் அதிகமாக தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அப்பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி மழை நீர் சாலைக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.