திருமுருகன்பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலயத்தில் கடந்த மாதம் கெட்டுப்போன உணவை உண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த வழக்கில் விடுதி அறங்காவலர் உட்பட 2 பேர் கைது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்தா சேவாலய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக அறங்காவலராக செந்தில்நாதன் (58) என்பவர் இருந்து வருகிறார். மேலும், விடுதி காப்பாளராக (வார்டன்) கோபி கிருஷ்ணன் (54) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் உள்பட 15 சிறுவர்கள் தங்கி, அருகேயுள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இரவு காப்பகத்தில் இருந்த 14 சிறுவர்களுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மாதேஷ் (15), பாபு (13), ஆதிஷ் (8) ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பாதிக்கப்பட்ட 11 சிறுவர்கள் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன் மாணவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்ததுடன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காப்பகத்தை பார்வையிட்டு, அதை மூடவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து விவேகானந்தா சேவாலயம் மூடப்பட்டு, கடந்த ஒரு மாதமாக காப்பகத்தின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உயிரிழந்த சிறுவர்களின் உடற்பாகங்கள் மற்றும் உணவு மாதிரிகள் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பபட்டிருந்தது. அந்த சோதனையில் உணவில் விஷம் கலக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
எனவே அஜாக்கிரதையாக செயல்பட்டது, உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காப்பகத்தின் நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன்(58) மற்றும் விடுதி காப்பாளர் கோபி கிருஷ்ணன் (54) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.