மழை பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், மழை நீரை அகற்ற கருவிகள் தயார் நிலையில் உள்ளதாக மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலம், அண்ணா நகர் பகுதியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று துவக்கி வைத்தார்.
இதனையடுத்து அப்பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். மேலும், மழை பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, திருப்பூர் மாநகராட்சி சார்பில் மழை பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சி மண்டலங்கள் வாரியாக அனைத்து வார்டுகளிலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது, அது மட்டுமின்றி மழை பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், மழைநீர் தேங்கும் இடங்களில் மின் மோட்டார் கொண்டு தண்ணீரை அப்புறப்படுத்தும் கருவிகள் தயார் நிலையில் உள்ளன.
எனவே எங்கு மழை பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக அதனை சரி செய்யும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லும்போது அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் தனியார் மருத்துவமனை நிர்வாகம், திருப்பூர் மாநகராட்சிக்கு உடனடியாக அந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.