பாஜக, சங் பரிவார் அமைப்புகள் சார்பில் அறிவித்துள்ள பந்த், ஒரு சமூக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என மாநகர காவல் ஆணையாளரிடம் அனைத்து இஸ்லாமிய ஜமாத் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கடந்த 23ஆம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து அக்டோபர் 31 ஆம் தேதி கோவை மாவட்ட பாஜக முழு அடைப்பு அறிவித்திருந்த நிலையில், இந்த பந்த் அறிவிப்பு ஒரு சமூக மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக அனைத்து இஸ்லாமிய மற்றும் ஜமாத் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இன்று மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து பேசிய ஜமாத் அமைப்பினர், இந்த பந்த் அறிவிப்பு தங்கள் சமூக மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து இஸ்லாமிய மற்றும் ஜமாத் அமைப்பினர் கூறும் போது: வரும் 31 ஆம் தேதி கோவையில் பாஜக, சங் பரிவார் அமைப்புகள் சார்பில் அறிவித்துள்ள பந்த், ஒரு சமூக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக போதிய வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் அவதியடைந்துள்ளனர்.
தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் இந்த மாதிரியான பந்த் அறிவித்துள்ளதால் கலவர சூழல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் உரிய பாதுகாப்பை காவல் துறை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்புகளிடம் காவல் துறை என்ன ஒத்துழைப்பு எதிர்பார்க்கிறது, எங்களது சந்தேகம் உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. பந்த் அறிவிப்பால் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் அனைத்து இஸ்லாமிய அமைப்பு கூட்டமைப்பினர் காவல் ஆணையாளரை சந்திக்க வந்துள்ளோம்.
பந்த் தொடர்பாக அழைத்து பேசி பந்த் கைவிடபடுமா? அல்லது நடவடிக்கை மூலம் நிறுத்தப்படுமா என காவல் துறை அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள். நீதிமன்றத்தில் வழக்கு சென்றுள்ளது, என்று தெரிவித்தனர்.