திருப்பூர் மாநகராட்சி அடுத்த எம்ஜிஆர் சிலை அருகே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அதிமுக எம்எல்ஏக்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை சட்டமன்றத்தில் சபாநாயகர் அங்கீகரிக்க வலியுறுத்தி.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அடுத்த எம்ஜிஆர் சிலை அருகே அதிமுகவின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சித் துணை தலைவரை அங்கீகாரம் செய்யாத சபாநாயகர் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதிமுகவினரின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.