சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், கலப்பு தீவனத்திற்கு மானிய விலை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அவை பின்வருமாறு,
மாடு வளர்ப்புக்கு தேவையான தீவண பொருட்களான பருத்திக்கொட்டை,புண்ணாக்கு, கலப்பு தீவனம் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. சோளத்தட்டு உள்ளிட்ட தீவன உற்பத்தி செலவுகள் அதிகரித்து விட்டது.
இதன் காரணமாக மாடு வளர்ப்பு என்பது அதிக பொருட்செலவை பிடிக்கிறது. 2019ஆம் ஆண்டுக்கு பின் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வில்லை. தற்போது பால் விலை லிட்டருக்கு 22 ரூபாய் முதல் அதிக கொழுப்புள்ள பாலுக்கு 28 ரூபாய் வரை கொள்முதல் விலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விலை கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்துவதால் தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அதாவது, பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 41 ரூபாயாகவும், எருமைப்பால் லிட்டர் 52 ரூபாய் எனவும்உயர்த்தி வழங்க வேண்டும், கலப்பு தீவனத்திற்கு மானிய விலை வழங்க வேண்டும்
இவ்வாறான கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.