பள்ளி முடிந்த பின்னர் குளத்தில் குளிக்க முற்பட்ட சஸ்வந்த்(8), அகிலன் (10), சஞ்சீவ் (7) என்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சூலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்தவர்கள் சஸ்வந்த்(8), அகிலன் (10), சஞ்சீவ் (7) இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

வழக்கமாக பள்ளி முடிந்து வந்த பின், சூலூர் சின்னக் குளக்கரையில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதேபோல, இன்று மாலை மூவரும் குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென குளத்தில் குளிக்க முற்பட்ட போது குளத்தில் தவறி விழுந்த மூவரும் கூச்சலிட்டதாக தெரிகிறது. அப்போது அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிறுவர்களை பார்த்துள்ளார். உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு அந்த இடத்திற்கு சென்று சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார்.
ஆனால், அந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வதற்குள் மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கினர்.
இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மூவரது உடலையும் மீட்டு உடனடியாக சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் மூவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குளத்தில் விளையாடச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சூலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.