தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில், மேடையில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி -க்கும் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்று தபெதிக கோரிக்கை வைத்துள்ளது.
கோவை: பா.ஜ.க மாவட்ட தலைவருக்கு அரசு நிகழ்ச்சியில் மேடையில் இருக்கை வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று "உழவர்கள் கூட்டம்" நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அரசு விழாவான இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியும் வந்திருந்தார்.
அவருக்கும் நிகழ்ச்சி மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் பிரதிநிதியாக இல்லாமல், ஒரு கட்சி சார்பில் கலந்து கொண்டவருக்கு பல்கலைக்கழகம் எப்படி மேடையில் இடம் கொடுத்தது என்று பல்வேறு அமைப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சரும், மாநில அமைச்சரும் கலந்து கொண்டிருக்கின்ற விழாவில், மேடையில் எந்த அரசுப் பொறுப்பிலும், இல்லாத கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் உத்தம ராமசாமி அமர்ந்துள்ளார்.
இதை அரசு விதிகள், பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கின்றதா? அரசு விழாவில் ஒரு அரசியல் கட்சியின் விழாவாக மாற்றிய பல்கலைக்கழக நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக அரசு உடனடியாக இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு விழாவில் மேடையில் பிஜேபி மாவட்ட தலைவரை அனுமதித்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.