கோவை காந்திபுரம், உக்கடம், ரயில் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இன்று பிற்பகல் கனமழை பெய்த நிலையில், மாநகராட்சி பொது சுகாதார அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவை காந்திபுரம், உக்கடம், ரயில் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
வெறும் 20 நிமிடம் பெய்த மழைக்கே, காந்திபுரம், சித்தாபுதூர், வி.கே.கே மேனன் சாலை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பொது சுகாதார அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
தண்ணீரை வெளியேற்றாமல் அந்த பகுதிகளில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மழைக்காலம் தீவிரம் அடைவதற்குள் மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிகால்களை தூர்வாரி வேண்டும் மற்றும் மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.