ஸ்ரீ விவேகானந்தா சேவாலயா குழந்தைகள் காப்பகத்தில் இரவு உணவு அருந்திய மூன்று குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் அறிவித்தபடி ரூபாய் 2 லட்சத்தை வருவாய் கோட்டாட்சியர் இன்று அவர்கள் குடும்பத்தாரிடம் வழங்கினார்.
திருப்பூர்: நேற்று முன்தினம் திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் என்ற குழந்தை காப்பகத்தில் இரவு உணவு உண்ட 14 குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்த தனமான போக்கால் குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த காப்பகத்தை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த சிறுவர்களான - ஆதீஷ் (11), மாதேஷ் (14), பாபு (10) ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, முதற்கட்டமாக ஆதீசின் தாயார் பூங்கொடிக்கு இன்று மாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரி நாதன் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.