கடந்த 2020 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கப்பட்ட பணிகளுக்கான தொகை இன்னும் வரவில்லை என்று குற்றம்சாட்டி வால்பாறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சுமார் 50 மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் நகராட்சி வேலைகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டில், நகராட்சியில் பல்வேறு வேலைகளுக்கு ஒப்பந்தம் புள்ளிகள் பெற்று வேலைகளை செய்து முடித்தும் அதற்கான ஒப்பந்த தொகையான பல லட்சம் ரூபாய் இது நாள் வரை கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், 2020-ம் ஆண்டில் அப்போதய ஆணையாளர் பல கோடி ரூபாய் மோசடி செய்தார் என்ற காரணத்தை கூறி எங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை வழங்காமல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஒப்பந்த பணிகளுக்கான தொகையை இன்னும் கொடுக்காததால் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் இன்று பட்டினியால் அவதிப்படுவதாகவும், இது குறித்து அரசிற்கு பல முறை மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.