மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உடல் நிலை குறைவுக்கு உண்மையான காரணம் தெரியவரும் என்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலை திருமுருகன்பூண்டி ரிங்ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற குழந்தைகள் காப்பகத்தில் நேற்று இரவு உணவிற்கு பின்னர் மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை திருப்பூர் அரசு மருத்துவமனையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சந்தித்துஅவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தது, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஅமைச்சர் மு.பெ.சாமிநாதன், சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிருந்தால் 3 பேரின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம். சிகிச்சையில் உள்ள 4 மாணவர்களுக்கு மட்டும் இன்னும் காய்ச்சல் குறையாத நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எஞ்சிய சிறுவர்கள் நல்லமுறையில் வீட்டுக்கு செல்லக்கூடிய நிலையில் உள்ளனர்.
உயிரிழந்த 3 சிறுவர்களின் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் தான், உணவில் ஏற்பட்ட கோளாறா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது தெரியவரும். உணவில் தான் பிரச்சினை என அனுமானத்தின் மூலம் முதல் கட்டமாக தெரியவருகிறது.
சம்பவம் குறித்து விசாரிக்கசமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை முதல்வர் அனுப்பி உள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.