நவராத்திரி விழாவின் முதல் நாளையொட்டி ஈஷா மையத்தில் குங்கும அபிஷேகத்தில் லிங்கபைரவி, தேவி துர்கையின் அம்சத்தை குறிக்கும் விதமாக காட்சியளித்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவை: ஈஷாவில் சிறப்பு பூஜைகளுடன் நவராத்திரி திருவிழா, நேற்று (26.09.2022) முதல் ககோலாகலமாக தொடங்கியது.
ஈஷாவில் உள்ள லிங்க பைரவி தேவியின் எல்லையில்லா அருளையும், சக்தியையும் உணர நவராத்திரி நாட்கள் மிகச் சிறந்த காலக்கட்டமாக உள்ளது. அந்த வகையில், நவராத்திரியின் முதல் நாளான நேற்று லிங்கபைரவி தேவி துர்கையின் அம்சத்தை குறிக்கும் விதமாக குங்கும அபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து, மாலையில் தேவியின் உற்சவ மூர்த்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நந்தியின் முன் மஹா ஆரத்தி நடைபெற்றது. இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், லிங்க பைரவி தேவி செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை லட்சுமியின் அம்சத்தை குறிக்கும் விதமாக மஞ்சள் அபிஷேகத்திலும், அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை சரஸ்வதியின் அம்சத்தை குறிக்கும் விதமாக சந்தன அபிஷேகத்திலும் காட்சியளிப்பார்.
செப்டம்பர் 29 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு மஹா ஆரத்தி நடைபெறும்.
இதுதவிர, இவ்விழாவை மேலும் சிறப்பிக்கும் விதமாக பாரம்பரிய இசை மற்றும் நடன கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சகள் தினமும் மாலை 6.30 மணி முதல் நடைபெறும்.
முதல் நாளான நேற்று ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 'த்ரிநயணி' என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.