ரத்தினபுரி மண்டல பாஜக தலைவரான மோகன் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஆக்சஸரீஸ் கடையில் 3வது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ரத்தினபுரி மண்டல பாஜக தலைவராக இருப்பவர் மோகன். கோவை 100 அடி சாலையில் இவருக்கு சொந்தமான வெல்டிங் ஆக்சஸரீஸ் கடை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை அவரது மகன் மகேந்திரன் கடைக்கு வந்த போது, கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய பாஜக பிரமுகர் மோகன், ஏற்கனவே கடை மீது 2 முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் தற்போது 3வது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு முறை குண்டு வீசப்பட்டதில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 2 முறையும் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த முறை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
கோவை நகரில் அடுத்தடுத்து பாஜக பிரமுகர்களை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வரும் சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.