சங்கராயபுரம் எம்.எல்.ஏவும், சட்டப்பேரவை அரசு உறுதி மொழி குழு தலைவருமான உதயசூரியன் தலைமையிலான குழுவினர் கோவை அரசு மருத்துவமனை, தீயணைப்பு மீட்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுவினர் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதி மொழிக்குழுவின் தலைவரும், சங்கராயபுரம் எம்.எல்.ஏவுமான உதயசூரியன் தலைமையில் நடைபெற்று வரும் ஆய்வின் ஒரு பகுதியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை பார்வையிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து, மருதமலை கோவிலில் லிப்ட் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் நூலகம் மற்றும் உயிர் அறிவியல் துறைகளுக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்தும், ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவை மேம்படுத்துவது குறித்தும், கோவை மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் சுமார் 152.95 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.