இந்துக்களை அவதுாறாக பேசிய எம்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் தி.மு.க காணாமல் போகும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை: இந்துக்களை அவதுாறாக பேசிய எம்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் தி.மு.க காணாமல் போகும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி எம்.பி. ராஜாவை கண்டித்து செப். 20ம் தேதி நீலகிரி தொகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக, ஏற்கனவே இந்து முன்னணி அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டடத்தில் பங்கேற்ற காடேஸ்வரா சுப்ரமணியம், இந்துக்களை குறித்து அவதூறாக பேசிய எம்.பி ஆ. ராசா மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் பேசிய அவர், தி.மு.க.வுக்கு சனி திசை நடக்கிறது. இது ஆ.ராசா மூலம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று பிரிவினைவாதத்தையும், மத துவேசத்தையும் தொடர்ந்து ஆ. ராசா பேசி வருகிறார்.
அவரது தலைவர் ஸ்டாலின் வீட்டினர் சொந்த ஊரில் சிறப்பாக கோயில் கும்பாபிஷேகம் செய்துள்ளனர். உறவினர்கள், ஸ்டாலின் நன்றாக இருக்க வேண்டும் என்று யாகங்கள் நடத்துகின்றனர். அவரது வீட்டில் தொடர்ந்து இந்து கலாசாரங்களும் பாரம்பரியங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.
எம்.பி.ஆ. ராசா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தி.மு.க. காணாமல் போய்விடும். தி.மு.க. அரசை மதச்சார்பின்மை அரசு என்கின்றனர். கட்சியில் இந்துக்களுக்கு விரோதமாக பேசுவோர், இருக்கும்போது எப்படி மதச்சார்பின்மை அரசாக இருக்க முடியும்? இவ்வாறு பேசுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.