தங்கள் பகுதிக்கு சரிவர அரசு பேருந்து இயக்கப்டாததை கண்டித்து கோவை பேரூர் மாதம்பட்டி அருகே 2 அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை: கோவை பேரூர் அடுத்த கரடிமடை, சென்னனூர், மத்திபாளையம், தண்ணீர் பந்தல், உள்ளிட்ட கிராம பகுதிக்குள் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள், சரிவர இயக்கப்படாததாக அப்பகுதி மக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் அரசு பேருந்துகளை கரடிமடை, சென்னனூர், மத்திபாளையம், தண்ணீர் பந்தல் பகுதிகளில் முறையாக இயக்க கோரியும், போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்தும் அப்பகுதி மக்கள் திடிரென இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்டாதால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லக்கூடிய நேரங்களில் அரசு பேருந்துகள் வராததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல், இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று மாதம்பட்டி பகுதியில் பேருந்து ஏறி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
மேலும், கல்லூரி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோரும் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், உடனடியாக இந்த 4 கிராமங்களுக்கும் முறையாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த பேரூர் காவல்துறையினர் கிராம மக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சமந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு பிரச்சனையை எடுத்து செல்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
காலை நேரத்தில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், வாகன நெரிசல் ஏற்பட்டு அவ்வழியாக வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர்.