மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டு வருவதாக தகவல் அறிந்து வந்த ஆட்சியர் சமீரன் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்தவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கோவை: வேலை வாய்ப்பு, உதவித் தொகை உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, உதவித் தொகை, அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது, திடீரென அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.பெண்கள் உட்பட 75 பேர் பங்கேற்ற தர்ணாவில், கையில் பதாகைகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மாற்றுத்திறனாளிகளின் மனுவை கிடப்பில் போடாமல், உடனடியாக தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் கோரிக்கை நிறைவேற்ற ஆவணம் செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதியாக திறன்பட செயல்படும் மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும், பெண்கள் மற்றும் மிகவும் நலிவுற்ற வறுமை கோட்டிற்க்கு கீழ்வாழும் மாற்றுத் திறந்தநாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரசாங்க உடனடி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
குறிப்பாக, பாதுகாப்புடன் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணிக்கும் வகையில் குண்டும் குழியுமாக இருக்கும் அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும்.
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளி மகளிர்கள் பயிற்சி பெற, சுயதொழில் செய்ய. விளையாட்டு பயிற்சி பெற மற்றும் பாதுகாப்பாக தங்குவர்தற்கு நீண்ட ஆண்டுகளாக பயனற்ற அரசாங்க பழைய கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும். மேலும், பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவிற்கான பயிற்சி பெற சிறப்பு திடல் அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இது குறித்து பேசிய அவர்கள், வேலை வாய்ப்பு, வீட்டு வசதி கோரி பல முறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. அப்படி, வீடுகளை ஒதுக்கினாலும், 4 ஆவது மாடியில் வீடுகளை ஒதுக்குகிறார்கள். மாற்றுதிறனாளியாக உள்ள எங்களால் எவ்வாறு மாடி ஏறி செல்ல முடியும் என்ற கேள்வியை முன்வைத்தனர்.
மேலும், மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டு வருவதாக தகவல் அறிந்து வந்தஆட்சியர் சமீரன் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்தவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.