கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (34) என்பவர் நண்பர்களுடன் பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இரவு மது அருந்திய நிலையில், காலையில் அவரது நண்பர்கள் பார்த்த போது, நீச்சல் குளத்தில் இறந்த நிலையில் தலைகுப்புற கிடந்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அருகே தனியார் ரிசார்ட் நீச்சல்குளத்தில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அருகே கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34) இவர், தனியார் சர்வீஸ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று சீனிவாசன் பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்குவதற்காக நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது, நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். இதனை தொடர்ந்து நண்பர்களுடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி குளித்துள்ளார். அனைவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நிலையில், இன்று காலை சீனிவாசனை மட்டும் காணாததால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சந்தேகத்தின் பேரில் நீச்சல் குளத்தில் அவரை தேடி பார்த்த போது தலை குப்புற நிலையில் சீனிவாசன் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை உடனடியாக தண்ணீரில் இருந்து மீட்டு, இது குறித்து கோவையில் வசிக்கும் சீனிவாசனின் தந்தை ஆனந்த நாராயணனுக்கு நண்பர்கள் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஆழியாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.