தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் அனைத்து வார்டுகள், ஊரகப் பகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் அவசர மருத்துவ முகாம்களை நடத்த அரசு உடனையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல்கள் அதிவேகமாக பரவி வருகின்றன. இந்த காய்ச்சல்களால் குழந்தைகள் குறிப்பாக பள்ளிச் செல்லும் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, போதுமான மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் இருப்பில் உள்ளது என்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப கூடாது என்று சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வேகமாக பரவிவரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு வரும் 25 ஆம் தேதி வரை விடுமுறை அழைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழகத்தில் பரவும் காய்ச்சலுக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்றும் உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல்கள் அதிவேகமாக பரவி வருகின்றன. இந்த காய்ச்சல்களால் குழந்தைகள் குறிப்பாக பள்ளிச் செல்லும் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மருத்துவமனைகள் குறிப்பாக குழந்தைகள் நல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இது, பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
காய்ச்சல் அதிகமாக பரவும் பகுதிகளை கண்டறிவதற்கு சோதனைகள் நடத்தப்படவில்லை. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தான் கட்டுக்கடங்காமல் காய்ச்சல் பரவி வருகிறது.
குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள, இந்த காய்ச்சல்கள் பரவ கொசுத் தொல்லையே முக்கிய காரணம். மழைநீர் வடிகால் சீரமைப்பு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி என்ற பெயரில், தமிழகம் முழுவதும் நகரப் பகுதிகளில், கால்வாய்கள் தோண்டப்பட்டு, பல மாதங்களாகவே பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.
இதனால், தெருக்களில் நடக்க முடியாமலும், சாலைகளில் வாகனங்களை ஓட்ட முடியாமலும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றன. இது ஒரு பக்கம் என்றால், கழிவுநீர் கால்வாய்களும், கழிவுநீர் கால்வாயாக அரசாங்கத்தாலேயே மாற்றப்பட்டு விட்ட, மழைநீர் வடிகால்களும் திறந்த நிலையில் இருப்பதால் கொசுத் தொல்லை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதனால், இரவு நேரங்களில் மட்டுமல்லாது, பகலிலும் கொசுக்கடியால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுவே பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் பரவக் காரணம்.
மழைநீர் வடிகால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் பல மாதங்களாக முடிக்கப்படாமல் இருப்பதற்கு, திமு.க. அரசின் அலட்சியமும், செயல்பாடற்ற தன்மையுமே காரணம். பெரும் வாய்ப் பேச்சிலேயே 14 மாதங்களை கடந்து விட்ட தி.மு.க. ஆட்சியில் இன்னும் என்னென்ன துயரங்களை அனுபவிக்க போகிறோமோ தெரியவில்லை.
எனவே, மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் பணிகளை உடனடியாக முடித்து, மக்களை குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல வகையான காய்ச்சல்கள் பரவி வருவதை தடுக்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நாட்டின் செல்வங்களான குழந்தைகளை பாதுகாக்க, தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில், பரவிவரும் காய்ச்சல்கள் குறித்தும், காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் அனைத்து வார்டுகள், ஊரகப் பகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் அவசர மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.