ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் தம்பதிகளுக்குக்கான நிகழ்ச்சியில், தங்களையும் அனுமதிக்கும்படி தகராரில் ஈடுபட்ட பாஜகவின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை ரேஸ் கோர்ஸ்பகுதியில் உள்ள பாப்பிஸ் நட்சத்திர ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை அன்று தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி (Couples Night) நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தம்பதிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். இதற்கான ஹோட்டல் நிர்வாகம் அறிவிப்பு பலகையையும் வைத்திருந்தது.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விலை உயர்ந்த காரில் வந்த ஆண்கள் நான்கு பேர், நிகழ்ச்சியில் பங்கேற்க தங்களையும் அனுமதிக்குமாறு ஹோட்டல் பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இது தம்பதிகள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று பாதுகாவலர்கள் எடுத்துச் சொல்லி, அவர்களை அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் பாதுகாவலர்களை மிரட்டியும், தகாத வார்த்தைகளால் பேசியும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்களை தாக்கி விட்டு, நாங்கள் யார் என்று தெரியுமா..? எனக் கூறி மீண்டும் ஹோட்டலுக்குள் நுழைய முயன்றதாக தெரிகிறது.
இதனால் தற்காப்பிற்காக ஹோட்டல் பவுன்சர்கள், தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் தாக்கி வெளியே அனுப்பினர்.இதையடுத்து அவர்கள் சொகுசு காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து பாப்பிஸ் ஹோட்டல்,கணக்காளர் விஷ்வபாரதி (24), ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தகராரில் ஈடுபட்ட லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசியஹோட்டல் நிர்வாகத்தினர், சம்பவத்தன்று வந்த நான்கு பேர் ஏற்கனவே குடி போதையில் இருந்ததாகவும், நடைபெறும் நிகழ்ச்சி தம்பதிகளுக்கானது என்று எவ்வளவு எடுத்து சொல்லியும் தொடர்ந்து உள்ளே அனுமதிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
மேலும், உள்ளே அனுமதிக்க அதிக பணம் தருகிறோம் என்று பேசி வந்தவர்கள், ஒரு கட்டத்தில் காரில் இருந்து கத்தியை எடுத்து வந்து மிரட்ட துவங்கினர். இதனால், வேறு வழியின்றி அனைவரின் பாதுகாப்பையும் கருதி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் அவர்களை தாக்கினர்.
சம்பவம் குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.
தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தீவிரமாக போலீசார் தேதி வருவதாக சொல்லப்படும்.நிலையில், இதில், ஜான்சன் என்பவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையின் முக்கிய பகுதியில் உள்ள ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட நபர்கள் அடி வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.