காப்பர் விலை உயர்வால், நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் - மேக் இந்தியா குழுமத்தின் தலைவர் மனுநீதி மாணிக்கம்.
கோவை: காப்பர் தேவையை கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் காப்பர் மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் என மேக் இந்தியா குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் காப்பர் விலை உயர்வு குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மேக் இந்தியா குழுமத்தின் தலைவர் மனுநீதி மாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது...
காப்பரின் விலை உயர்ந்துள்ளதால், வெட் கிரைண்டர் மற்றும் பம்ப் செட் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட மோட்டார் உற்பத்தி தொழிற்சாலை வளர்ச்சிகள் கேள்விக்குறியாகி உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, காப்பர் ஒரு கிலோ சுமார் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒரு கிலோ 750 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் காப்பர் மூலம் செய்யப்படும் அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்து உள்ளதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் சிறு குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. காப்பரின் அதீத விலை உயர்வு காரணமாகநாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் காப்பருக்கு உண்டான தாது பொருட்கள் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் கிடைக்கிறது. ஆனால் நம் நாட்டில் சொற்ப அளவில் மட்டும் தான் கிடைக்கப்பெற்று வருகிறது. ஏற்கனவே ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை கடந்த நான்கு வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது.
காப்பர் தேவையை கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் தனியார் கூட்டமைப்பு மூலம் மூலப் பொருட்களை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். மீண்டும் காப்பர் ஆலையை இயக்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.
அவ்வாறு பரிசீலனை செய்யும் பொழுது அதிலிருந்து வீணாகும் கழிவுகளை எப்படி மறுசுழற்சி செய்வது அதனை மீண்டும் எப்படி உபயோகப்படுத்துவது பாதிப்பில்லாத வகையில் எப்படி மாற்றுவது போன்ற அனைத்து விதமான தொழில்நுட்பங்களும் எங்களிடம் உள்ளது.
எனவே அரசாங்கம் முன் வந்து இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காப்பர் உற்பத்தி தொழிலை உடனடியாக தொடங்க வேண்டும். இல்லை என்றால் காப்பரின் விலை அதிகரித்து தொழில்துறையே முடங்கும் நிலைக்கு தள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.