நீலாம்பூர் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகளை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வழக்கறிஞர் ஒருவரது வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மாட்டை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: நீலாம்பூர் பகுதியில்நள்ளிரவில் மாட்டை திருடிச் செல்லும்மர்ம நபர் குறித்தசிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் செல்வகுமார். இவர் தனது வீட்டின் தோட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு அவரது வீட்டில் இருந்த நாய்கள் சத்தமிட்ட நிலையில் வெளியில் வந்து பார்த்துள்ளனர்.
அப்போது அவரது வீட்டு மாட்டுக் கொட்டகையில் கட்டி இருந்த மாடு காணாமல் போனது தெரிய வந்தது.
பின்னர் அங்கு பொருத்தி இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்து போது, அதில் மாட்டை நபர் ஒருவர் அவிழ்த்து கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் சென்று தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, இருட்டான பகுதியில் மாடு நின்று கொண்டு இருப்பதை கண்டு மீண்டும் அந்த மாட்டை தோட்டத்தில் கட்டி உள்ளனர். பின்னர், இது குறித்து, சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து, அந்த நபரை, லாரி நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய மாட்டின் உரிமையாளர் செல்வகுமார் , ஏற்கனவே இதுபோன்று இரண்டு முறை மாடுகளை திருட முயற்சிகள் நடந்துள்ளது.அவர்களை அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளார்.