காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழல் உருவாக்கும் முயற்சியாக, வரும் 24 முதல் 30 தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் காவல் துறை சார்பில் 10 அணிகளும், பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளது. இப்போட்டிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன.
கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில், பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, கோவை மாநகர காவல் துறை சார்பில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான நல்லுறவை காக்கும் வகையிலும், இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், இளைஞர்கள் அதிவேகமாக சென்று ஏற்படுத்தும் விபத்துகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியாக இப்போட்டிகள் நடைபெற உள்ளது.
வரும் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் போட்டியானது காவல்துறைக்கு தனியாகவும், பொதுமக்களுக்கு தனியாகவும் நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் காவல் துறை சார்பில் 10 அணிகளும் - பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
இந்த தொடரின் லீக் போட்டிகள் கோவை வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன. இறுதி போட்டிகள் வரும் அக்டோபர் 2ஆம் தேதி பி.எஸ்.ஜி ஐ.எம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் முதல் பரிசு ரூ.25,000, இரண்டாவது பரிசு ரூ.15,000, மூன்றாவது பரிசு ரூ.7,500, நான்காவது பரிசு ரூ.3,000 வழங்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.