உப்பிலிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தேவி என்ற பெண் அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: உப்பிலிபாளையம் அருகே தனியார் குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர்கள் மூர்த்தி - தேவி(27) தம்பதி. கணவர் மூர்த்தி இறந்த நிலையில், தேவி அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தேவி தனது அக்கவான சத்யா (33) உடன் நேற்றைய தினம் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.
அப்போது மாலை 5.30 மணியளவில் பணியில் இருந்த தேவி மாயமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சத்யா அப்பகுதி முழுவதும் அவரை தேடியுள்ளார். கிடைக்காத நிலையில், 7.30 மணியளவில் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்த போது தேவி, தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறை மற்றும் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தேவியின் உடலை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண், தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.