ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்திருந்த வெட் கிரைண்டர் உற்பத்தி மற்றும் விற்பனை தொழில், ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கு பின் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சுமார் 30,000 க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.
கோவை: ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோவையில் வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் வெட் கிரைண்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரியானது 5 சதவீதத்தில் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அதனை திரும்ப பெற கோரி பலமுறை வெட்கிரைண்டர்கள் சங்கத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயமுத்தூர் வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்க தலைவர் செளந்தர்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குறுந்தொழில் சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், செளந்தர்மோகன் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய, வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்க தலைவர் செளந்தர்குமார், மத்திய அரசு 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வெட்கிரைண்டர் மீது ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியது. அதனை திரும்ப பெற வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கம் எந்த அரசையும் எதிர்ப்பதும் அல்ல எந்த கட்சியையும் சார்ந்ததும் அல்ல. ஜி.எஸ்.டி வரி உயர்விற்கு முன் கல் பிரச்சனை இருந்து வந்தது. அதனை தொடர்ந்தே மூல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது .
இதனால் மிகப்பெரிய அளவில் எங்களது தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 18% ஜி.எஸ்.டி வரி உயர்வால் தொழில் இன்னும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விலை உயர்வால் வாங்கும் மக்களும் குறைந்து விட்டனர்.
இதனால் வியாபாரம், உற்பத்தி என அனைத்தும் குறைந்து இந்த தொழிலை நம்பி இருக்க கூடிய பெண்கள் உட்பட 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.