பொள்ளாச்சியில் பாட்டியுடன் வசிக்கும் சிறுமிக்கு, தந்தையின் அண்ணன் குடும்பத்தினர் சொத்தை அபகரிக்கும் நோக்கில் கொலை மிரட்டல் விடுப்பதாக ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சிறுமி மனு அளித்துள்ளார்.
கோவை: கிணத்துக்கடவு அருகே தாய் தந்தை இல்லாததால், சொத்தை அபகரிப்பதற்காக உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக 14 வயது சிறுமி ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமியின், தாய் - தந்தை இருவரும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமி பொள்ளாச்சியில் உள்ள அவரது பாட்டியின் ஆதரவில் வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தனது தாய், தந்தையின் சொத்தை அபகரிக்க தனது பெரியப்பா, பெரியம்மா அவர்களது மகன் ஆகியோர் அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதுடன், தனக்கும் பாட்டிக்கும் கொலை மிரட்டல் விடுவதாக கூறி புகார் மனு அளித்தார்.
மேலும், அவர் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டதாக பொய் புகார் அளித்ததாகவும், ஆனால் விசாரணையில் தன் மீது எவ்வித தவறுமில்லை என காவல்துறையினரே கூறி விட்டனர் என்பதையும் புகார் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சொத்தை அபகரிக்க முயலும் உறவினர்களிடம் இருந்து தனக்கும் தனது பாட்டியின் உயிருக்கும் உடமைகளுக்கு பாதுகாப்பு நல்க வேண்டுமென அச்சிறுமி கோவை ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரயணன் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார்.